சட்டத்திற்கு உட்பட்டு பேரணிகள் நடைபெறுவதை போலிஸார் உறுதி செய்ய வேண்டும்: உள்துறை அமைச்சு
புத்ராஜெயா:
நாட்டில் சட்டத்திற்கு உட்பட்டு பேரணிகள் நடைபெறுவதை போலிஸார் உறுதி செய்ய வேண்டும்.
உள்துறை அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.
அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை ஒழுங்காகவும், விவேகமாகவும், சட்டப்பூர்வமாகவும் பயன்படுத்துவதை போலிஸ் உறுதி செய்ய வேண்டும்.
இதற்கான போலிஸ்படையின் நடவடிக்கைகளை உள்துறை அமைச்சு முழுமையாக ஆதரிக்கிறது.
தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் நேற்று மாலை நடந்த ஒரு கூட்டத்தில் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதைத் தடுத்ததற்காக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சு இவ்வாறு கூறியது.
அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உரிமை பொதுப் பாதுகாப்பைப் பாதிக்காமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல், பொது ஒழுங்கை சீர்குலைக்காமல் அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்வதைத் தடுக்காமல் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சு வலியுறுத்தியது.
- பார்த்திபன் நாகராஜன்

