நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்: பதாகைகளை ஏந்திய இஸ்லாமியர்கள் மீது போலீஸ் தடியடி
புது டெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன் என்ற பதாகைகளை ஏந்திய இஸ்லாமியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தாக கூறி பலரை தடுப்புக்காவலில் வைத்தனர்.
மீலாது நபி தினத்தன்று கான்பூரில் இஸ்லாமியர்கள் "நான் முஹம்மதுவை நேசிக்கிறேன்' என்ற வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருந்தனர்.
இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அமைதியை சீர்குலைக்கும் முயற்சி என அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பேரணியில் பங்கேற்ற 9 பேர், அடையாளம் தெரியாத 15 பேர் மீது கான்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் பல்வேறு மாநிலங்களில் பரவி "நான் முஹம்மதுவை நேசிக்கிறேன்' என்ற வாசகத்தை இஸ்லாமியர்கள் ஏந்தினர்.
இந்நிலையில் பரேலியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு "நான் முஹம்மதுவை நேசிக்கிறேன்' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் இஸ்லாமியர்கள் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனால், அந்த இடம் போர் களம்போல் மாறியது.இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் பலரை போலீஸார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

