images

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை

image

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை

சென்னை: 

தமிழகத்தில் நாளை முதல் 27-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

மேற்கு வங்கம், அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறையக்கூடும். 

நாளை, மத்திய வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். 

இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் செப்.27-ம் தேதி கரையை கடக்கக்கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை முதல் செப்.30-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நாளை முதல் (செப்.27) தேதி வரை கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 26-ஆம் தேதி தென்காசியிலும் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 28-ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

- ஆர்யன்

​​​​

பகிர்
+ - reset