எச்1பி விசா கட்டணம் உயர்வு: விமானநிலையங்களில் கூட்ட நெரிசல்
புது டெல்லி:
அமெரிக்காவில் பணியாற்றுபவர்களுக்கு அளிக்கப்படும் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை திடீரென ஒரு லட்சம் டாலர் அதாவது ரூ.88 லட்சமாக அதிபர் டிரம்ப் உயர்த்தியதால் இந்தியாவுக்கு வந்திருந்திருந்தவர்கள் மீண்டும் வேகமாக அமெரிக்காவுக்கு திரும்பியதால் இந்திய விமான நிலையங்களில் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
டெல்லி, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை என பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
திருமணம் செய்து கொள்ள வந்திருந்தவர்கள் திருமணத்தை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு உடனடியாக அமெரிக்கா புறப்பட்டனர்.
திடீரென்று கூட்டம் அலை மோதியதால் விமானக் கட்டணமும் உயர்ந்தது.
மேலும், அமெரிக்காவில் தங்கியுள்ள ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.
கடந்த ஆண்டு எச்1பி விசாவுக்கு 7.80 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு குலுக்கல் அடிப்படையில் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்பட்டன. இதில் 75 சதவீதம் பேர் இந்தியர்களாவர். இந்த விசா பெற்றவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்றலாம். மேலும் 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை நீட்டிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

