ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை:
ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளார்.
சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்கிறார்.
ஏற்கனவே திமுக கூட்டணிக் கட்சிகள், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
அடுத்து வரும் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு இல்லை. தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து செயல்பட்டுவரும் ஆளுநர் திரு.ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 18.8.2025, 19.8.2025 ஆகிய நாட்களில் நடைபெறும் இரண்டு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் முதலமைச்சர் அவர்களின் அறிவுத்தலின்படி பங்கேற்கப் போவதில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதுமட்டுமன்றி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்களின் சட்டம் தொடர்பாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைப் பெற்ற பின்பு பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகி குட்டி (எ) வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை பெற்றார். அந்தத் தடையாணையினை நீக்கிட உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு அணுகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில், ஆளுநர் மேற்படி பா.ஜ.க. பிரமுகர் தெரிவித்த கருத்துக்களை ஆதரிக்கும் வகையில் முந்திக்கொண்டு போய் வாதுரை தாக்கல் செய்துள்ளார். இது அவரது அரசியல் சார்பு தன்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதோடு, அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கும் இது ஓர் உதாரணமாக விளங்குகிறது.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் நிலைமைக்கு ஆளுநரின் செயல்பாடுகளும், அவர் போட்டுவரும் முட்டுக்கட்டைகளும்தான் காரணம்.
இந்தச் சூழ்நிலையில் முதலமைச்சர் 15.8.2025 அன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்.
மேலும், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அழகப்பா பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்

