தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
சென்னை:
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வட தமிழகத்தில் நாளை (ஆக.9) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 12ஆம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுருத்தப்படுகிறார்கள்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

