கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்படும் தளம் சபாவில் அமைக்கப்படும்: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்படும் தளம் சபாவில் அமைக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
சீனாவிற்கு கடல் உணவு ஏற்றுமதியை விரிவுப்படுத்துவதற்காக இந்தத் தளம் சபாவில் அமைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் சீனாவிற்கு கடல் உணவுகள் மிக விரைவாக ஏற்றுமதி செய்ய இயலும் என்று அவர் கூறினார்.
மேலும், மலேசியாவின் ஒட்டுமொத்த கடல் உணவு உற்பத்தியில் நான்கில் ஒரு பகுதி சபா மாநிலத்திலிருந்து கிடைக்கப் பெறுகின்றது.
2022-ஆம் ஆண்டில் சீனாவிற்கு 174 மில்லியன் மதிப்புள்ள கடல் உணவுகளையும், ஹாங்காங்கிற்கு 43.6 மில்லியன் மதிப்புள்ள கடல் உணவுகளையும் சபாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 15 ஆண்டுகளாக சீனா மலேசியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக இருந்து வந்த நிலையில் 2024-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகம் 396.14 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த வர்த்தக மதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 7.6 விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

