நிலவில் 8 மீட்டர் நடைபோட்ட ரோவர்
நிலவில் 8 மீட்டர் நடைபோட்ட ரோவர்
பெங்களூரு:
விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் மீது தரையிறங்கி 8 மீட்டர் வெற்றிகரமாக பயணித்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டது.
சந்திரயான்3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து 26 கிலோ எடை, 6 சக்கரங்கள் கொண்ட பிரக்யான் ரோவர் கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தரை மீது வெற்றிகரமாக தடம் பதித்தது. அன்றைய நள்ளிரவு 12.30 மணி அளவில் சரிவுத்தளத்தின் வாயிலாக நிலவின் தரை மீது ரோவர் இறங்கியது. நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்துள்ள இடத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுப் பகுதியில் பிரக்யான் ரோவர் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து சரிவுத்தளத்தில் பிரக்யான் ரோவர் மெல்ல மெல்ல நகர்ந்து நிலவில் தரையிறங்கி, நிலவில் உருண்டோடும் 30 விநாடிகள் கொண்ட விடியோவை இஸ்ரோ வெளியிட்டது.
ரோவரின் அனைத்து இயக்கங்களும் சரிபார்க்கப்பட்டன. 8 மீட்டர் தொலைவு பரப்பில் ரோவர் வெற்றிகரமாகப் பயணித்தது. ஆய்வுக் கருவிகள் நன்றாகச் செயல்படுகின்றன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- ஆர்யன்

