ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
பெங்களூரு:
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறக்கும் முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல்கட்ட சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிகழ்த்தியது.
இத் திட்டத்தில் இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ககன்யான் வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.
அண்மையில் சுபான்ஷு சுக்லாஆக்ஸியம் 4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாகச் சென்று திரும்பினார்.
ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சோதனையின் போது, ககன்யான் விண்கலம் ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்டு பாராசூட் அமைப்பின் செயல்பாடுகள் முழுமையாக சோதிக்கப்பட்டன.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திவிட்டால் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்குப் பிறகு சொந்த விண்கலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவாகும்.

