images

எல்லாமே என் பணம்தான் எனும் மாயை! - டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்

image

எல்லாமே என் பணம்தான் எனும் மாயை! - டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்

நம் கையில் இருப்பது, நம் கணக்கில் வருவது, நமது வியாபாரத்தில் புழங்குவது, ஏன் நமது வங்கிக் கணக்கில் வரும் பணம் நம்முடையதா? இந்தக் கேள்வி எழுவதற்கு தேவையே இல்லை எனலாம். 

என்றாலும், அஞ்சறைப் பெட்டியில் உள்ள அம்மாவின் சில்லறையைப் பிள்ளை எடுப்பது, அப்பாவின் பையில் அம்மா நோட்டுகளைத் தேடுவது, அலுவலகத்தில் கையிருப்புத் தொகையில் கைவைப்பது போன்றவை சர்வ சாதாரணமாக நடக்கின்ற விஷயங்கள். 

நிதி ஒழுங்கு பற்றிய சிந்தனை சீராக இல்லை என்பதையே இவை கூறுகின்றன.

தொடர்ந்து ஏற்பட்டு வரும் இதுபோன்ற சில நிலவரங்களில் இருந்து, எது யாருடைய பணம், எங்கே, எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பண்பாடும் பயன்பாடும் சரிந்து வருகிறது என்பதைச் சுட்ட வேண்டியுள்ளது.

ஒன்று:

கடன் பெறும்போது இதற்குத்தான் இந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை நிச்சயம் இருக்கும். அந்த வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கு அல்லாமல் வேறு ஒன்றிற்கும் பயன்படுத்துவது நிபந்தனையை மீறும் செயல். 

அப்படி கடன் பெற்ற பணம் வேறு காரியத்திற்கு சென்றுள்ளது என அறியப்பட்டால் முழு கடனும் திரும்பிப் பெறப்படும்.

இரண்டு:

நிறுவனக் கணக்கில் இருக்கும் நிதி, நிறுவனத்திற்கு சொந்தமானது. “அதுவும் என் பணம்தான்” என்ற எண்ணத்துடன் பணத்தை வெளியாக்கி வேறு ஒரு உபயோகத்திற்கு பயன்படுத்துவது தவறு. 

மற்ற தனி வழிகளில் நல்ல லாபம் வருகிறது என்ற வாதம் பயனளிக்காது. நிறுவன நிதியை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவது கையாடலுக்குச் சமமாகும். இதனை  நம்பிக்கை துரோகச் செயலாக எண்ணி பங்காளிகள் நடவடிக்கை எடுக்க முடியும்.

மூன்று:

உங்கள் வங்கிக் கணக்கில் வங்கியே தவறுதலாக பணத்தை ‘கிரெடிட்’ வரவு வைத்திருந்தால் அது உங்கள் பணம் அல்ல. தவறு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் அப் பணத்தை ‘கையாண்டு’ சுய தேவைக்குப் பயன்படுத்தினால் அது குற்றமாகும். பின்னர் கொடுத்துவிடலாம் ‘சால்ஜாப்பு’ எடுபடாது

நான்கு:

அரசாங்கத்தில் புழங்கும் அனைத்து நிதியும் மக்கள் நேரடியாகவும் மற்ற வழிகளிலும் கொடுக்கும் வரிப் பணமே. எனவே, அது மக்கள் - வரி  செலுத்துபவர்களின் பணம் இல்லை என்ற அரசாங்கத்திற்கு தனிப்பட்ட நிதி உண்டு என்ற கூற்றும் ஏற்புடையதல்ல.

எல்லாமே என் பணம்தான் என்பது மாயை.  நிதி விவகாரத்தில் ஒழுங்கு முறைகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தவறினால், பாதிப்பு பல ரூபங்களில் வரும்.
 

பகிர்
+ - reset